தகப்பனின் சொத்தில் பெண்களுக்குப் பங்கு
>> Monday, December 08, 2025
படித்ததில் பிடித்தது......(எழுதியவருக்கு நன்றிகள்...)
தகப்பனின் சொத்தில் பெண்களுக்குப் பங்கு கொடுக்கத் தேவை இல்லை என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...
ஒரு வீட்டில் பிறந்த அண்ணன்- தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக் கொள்வார்கள்... அதன் பிறகு அவர்கள் பங்காளிகள் மட்டுமே இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும் அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்துக் கொள்வதோடு சரி, மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும் பின்பு வசூலிக்கப்படும், சில சமயங்களில் வட்டியுடன்...
ஆனால் பெண்களுக்குப் பாகம் எதுவும் கொடுப்பது இல்லை... மாறாக கல்யாணத்திற்கு சீர் செய்வார்கள். நகை- நட்டு -பாத்திரம்- பண்டம்- வாகனம்- ரொக்கம் என இந்த பட்டியல்களும் நீளும்...
பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் செனத்தியின் மதிப்பு அதிகமாக தான் இருக்கும்...
அதோடு விடுவது இல்லை...
சீமந்தம், பிள்ளைப்பேறு, பெயர் சூட்டுதல் தொடங்கி அந்தப் பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் குடலை அறுத்தாவது கொடுத்தே ஆக வேண்டும்... அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வர வேண்டும்...
எல்லாவற்றையும் கணக்குப் போட்டு பார்த்தால் பாகம் பிரித்திருந்தால் போயிருக்க கூடிய சொத்தின் அளவை விட பன்மடங்குப் போயிருக்கும்... இதை எந்த ஆணும் கணக்குப் பண்ணி பார்த்தது இல்லை...
"நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவை விட கூடுதலாக உனக்குக் கொடுத்து விட்டேன்.. இனிமேல் செய்ய முடியாது " என்று சொல்வதில்லை... இவன் கடனை வாங்கியோ.. தமக்கு கிடைத்தச் சொத்தை விற்றோ கூட தங்கையின்-அக்காளின் நலனிற்காக அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வான்... நியாயமாக வரதட்சணைக்கு எதிராக போராட வேண்டியவன் ஆண் தான்... தந்தையின் சொத்தைப் பாகம் பிரிக்கையில் சகோதரிக்கும் ஒரு பாகத்தைக் கொடுத்து விட்டு அதோடு நல்லது கெட்டதுக்கு நாம கலந்துக்குவோம்.
கொடுக்கல் வாங்கல் எதுவும் வேண்டாம் அப்படியே இருந்தாலும் அதைக் கணக்கில் வைத்து திரும்ப வாங்கிக் கொள்வோம் என்று நினைத்தால் அதன் பிறகு அவன் சம்பாதிக்கும் அனைத்துமே அவனுக்கே சொந்தம்...
ஆனால் எந்த ஆணும் அப்படி சிந்திப்பது இல்லை... வேறு வீட்டில் வாழப் போகும் பெண்ணுக்கு கடைசிவரைப் பாதுகாப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழி தான் சீர் செனத்தி எல்லாம்... அப்படி பாகமாய் சொத்தைப் பிரித்து கொடுத்து விட்டு விட்டால் அந்தப் பெண் ஆதரவற்றுப் போவாள்...
இவனும் எனக்குத் தெரியாது என்று ஒதுங்கி விடுவான்... அதற்கு வழிக் கொடுக்காமல் அந்த உறவைப் பிணைத்து வைக்கவே பெண்களுக்கு சொத்துக்களைப் பாகமாய் பிரித்துக் கொடுக்காமல் முதலீடாய் சகோதரனிடமே விட்டு விட்டு கடைசி வரை கொஞ்சம் கொஞ்சமாய் வசூலிக்கும் வாய்ப்பைப் பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்...
(உண்மை...)